அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?..தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. கோவை அவிநாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சிலைகளும் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழகத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு தலைவர்களை பொறுத்தவரையில் அவர்கள் மரியாதைக்குரியவர்கள், அவர்களுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரசு நிலங்களை இதுபோன்று சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் வைப்பதை தடுக்கு வகையில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் என்ன என்ற விரிவான அறிக்கையுடன் அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

Related Stories: