சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உடல் கருகி பலியாகினர். சங்கராபுரம் மும்முனை சந்திப்பு அருகில் செல்வகணபதி மளிகை கடை, பட்டாசு கடை நடத்தி வருகிறார். நேற்று பட்டாசுகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென பட்டாசு வெடித்து கடையில் தீப்பற்றியது. இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த அன்னம்மாள், சாந்தினி, சிவகாமி, சரிதா, பரமேஸ்வரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் தப்பித்து வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் தீ அதிவேகமாக அருகில் இருந்த பேக்கரி மற்றும் துணிக்கடைக்கும் பரவியது.
அப்போது கடையில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் பட்டாசுகள் மற்றும் கடைகளின் சுவர்களில் இருந்து தூக்கி எறியப்பட்ட கற்களும் ஆங்காங்கே பறந்து சென்று விழுந்தது. அப்போது சாலை ஓரம் நின்றிருந்த சங்கராபுரத்தை சேர்ந்த காலித் (23), ஷா ஆலம் (24), பூ வியாபாரி ஷேக் பஷீர் (72) மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் உள்பட 6 பேர் மீது கற்களுடன், பட்டாசுகளும் விழுந்து வெடித்து சிதறியதில் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு கடையின் மேல்பகுதியில் 4 பேர் வேலை செய்ததாக கூறப்படுகிறது.