நம்பி போன 18 எம்எல்ஏக்களின் கதி என்ன ஆனது; சசிகலாவை கட்சியில் இணைத்தால் எதிர்ப்பாளர்களை சித்ரவதை செய்வார்: ஓபிஎஸ் பேட்டிக்கு சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் கடும் எதிர்ப்பு.!

சென்னை: சசிகலா, டி.டி.வி.தினகரனை நம்பி போன 18 எம்எல்ஏக்கள் கதி என்ன ஆனது என்று தெரியும். இந்த நிலையில் சசிகலாவை கட்சியில் இணைத்தால், தன்னை எதிர்த்தவர்களை எந்த அளவுக்கு அவர் சித்ரவதை பண்ணுவார் என்று ஓபிஎஸ்சுக்கு சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம் கேள்வி எழுப்பியுள்ளார். தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம் நேற்று அளித்த பேட்டி:  அதிமுகவை நடத்துவதற்காக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் தான் ஒருங்கிணைப்பாளர்கள். அவர்களின் முடிவை நம்மீது திணிக்க கூடாது. நம்முடைய முடிவை தான் அவர்களிடம் சொல்ல வேண்டும். சசிகலாவுக்கு இடம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக அவர் சொல்ல வேண்டும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பத்திரிகையாளர்களுக்கு போற போக்கில் சொல்லிவிட்டு போய் இருப்பார்.

கண்டிப்பாக  சசிகலாவை அதிமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை ஓபிஎஸ் எதிர்ப்பார். அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபோது, டி.டி.வி.தினகரனை ரகசியமாக போய் சந்தித்தார். அவர் சந்தித்ததை அரசியல் நாகரீகம் என்று கூட தெரியாமல் அதனை பொதுவெளியில் டி.டி.வி.தினகரன் போட்டு உடைத்தார். இப்படிப்பட்ட அனுபவம் இருந்தும் மறுபடியும், சசிகலா டூர் போகும் நேரத்தில், இதுபோன்ற குழப்பங்கள் உருவாக கூடாது. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது தலைமை கழகத்தில் எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. அவர்களுடன் தொடர்புடையவர்கள் எல்லாத்தையும் கட்சியை விட்டு நீக்கியாச்சு. அந்த அம்மா ஆடியோ நாடகம் எல்லாம் போட்டாங்க. அதுக்கு அப்புறம் டூர் போறோம் என்கிறாங்க. அவர் பொது செயலாளர் என்று போட்டதற்காக வழக்கு போட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் இது மாதிரி பேசுவது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது என்று தொண்டர்கள் சொல்கிறார்கள். சசிகலாவை கட்சியில் இணைக்க கண்டிப்பாக ஓபிஎஸ் தயாராக இருக்க மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், அவரே தர்மயுத்தம் நடத்தும் போது சொன்னார். அவர்கள் கொடுத்த சித்ரவதையில் நான் தற்கொலையே பண்ணி விடலாமோ என்ற எண்ணமே எனக்கு வந்தது என்று சொல்லியிருக்கிறார். ஆகவே, அவர் இதை மாதிரி செய்ய மாட்டார் என்று நம்புகிறோம். ஆட்சியில் இருக்கும் போது சசிகலா மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பேச்சை கேட்டு 18 எம்எல்ஏக்கள் போனார்கள்.

அவர்கள் நிலைமை இன்று என்ன ஆனது. ஆட்சியில் இருக்கும் போதே சின்னாபின்னமாகி விட்டார்கள். அவர்களுக்கே அந்த கதி என்றால், அவர்களை ஏற்றுக் கொண்டால், அவர்களை எதிர்த்த நம்மை எல்லாம் எந்த அளவுக்கு சித்ரவதை பண்ணுவாங்க. கண்டிப்பாக எல்லா மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராக தான் தொண்டர்களின் கருத்து வரும். இதில் எந்த மாற்று கருத்தும் வராது. இவ்வாறு அவர் கூறினார். ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு எதிராக நேற்று முன்தினம் ஜெயக்குமார் பேட்டியளித்தார். நேற்று ஆதிராஜாராம் பேட்டி அளித்துள்ளார். தினமும் ஒவ்வொரு மாவட்டச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேட்டியளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: