அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்: பெற்றோருக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

சென்னை: சென்னை அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.கே.மோகன் அறக்கட்டளை பங்களிப்புடன், செயல்வழி கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:செயல்வழிக் கற்றல் வகுப்பறைகள், மழலையர் வகுப்புகள் நேற்று அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, தனியாரின் பங்களிப்பு அவசியம். தமிழகத்தில்  45,000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன.  அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில், சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் நேற்று அரசுப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி தானே என்று தாழ்வாக எண்ணிவிடக்கூடாது. அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும். பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த முதல்வர் வேகமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாங்களும் வேகமாக ஓடவேண்டி உள்ளது. ‘‘இல்லம் தேடிக் கல்வி” திட்டத்துக்கு, இதுவரை 60,400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து, பதிவு செய்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் தன்னார்வலர்களாக பதிவு செய்ய முன்வர வேண்டும். இத்திட்டத்தில், அவர்கள் சேர, அழைக்கிறேன். ‘‘அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம்” என்று மாற்றிக்காட்ட,கடுமையாக உழைத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: