நடுரோட்டில் ஓட ஓட விரட்டி விசிக பிரமுகர் வெட்டிக்கொலை: தப்பியோடிய 6 பேருக்கு வலை

சென்னை: சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (50). கார் டிரைவரான இவர், அம்பேத்கர் சமூக நலச்சங்க தலைவராகவும், 107வது வட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராகவும் இருந்து வந்தார். மேலும், டீ கடை ஒன்றும் நடத்தி வந்தார். இவருக்கு சீதா (45) என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இளங்கோவன் அதே பகுதி மலையாள கிளப் சாலை சந்திப்பில் தனது நண்பர் ஜெயவேலுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 6 பேர், இளங்கோவனை அரிவாளால் வெட்டினர். சுதாரித்துக்கொண்ட இளங்கோவன் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால், அவர்கள் விடாமல் துரத்தி சென்று, இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

தகவலறிந்து வந்த போலீசார், இளங்கோவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், மதுரவாயலில் வசிக்கும் சஞ்சய் பிரபு சமீபத்தில் இளங்கோவனின் டீ கடைக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் இளங்கோவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இதுதொடர்பாக, சேத்துப்பட்டு 21வது தெருவை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (51), ஜெகநாதபுரம் 4வது தெருவை சேர்ந்த குமரவேல் (39) ஆகியோரை பிடித்து  விசாரிக்கின்றனர்.

Related Stories: