பீஜிங்: சீனாவில் 40 லட்சம் பேர் வசிக்கும் நகரத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அந்நகரம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் மி பெங் நேற்று முன்தினம் ளித்த பேட்டியில், `கடந்த 17ம் தேதி முதல் சீனாவின் 11 மாகாணங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உருமாறிய டெல்டா வகை வைரசினால் பாதித்துள்ளனர். இது மிக வேகமாக பரவுவதால் பல நகரங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் 6 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால், நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார். ரஷ்யாவில் பலி அதிகரிப்பு: சீனா போல் இங்கிலாந்து, ரஷ்யாவிலம் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 1,106 பேர் பலியாகினர். இதனால், இந்த நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,32,775 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.