கணக்கில் வராத பணம் என்று எதுவும் இல்லை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: கணக்கில் வராத பணம் என்று எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் என சுமார் 26 இடங்களில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 25 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு கடந்த செப்டம்பர் 30ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, தான் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என கேட்டிருந்தார். அந்த அடிப்படையில் 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு நேற்று சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக 2வது நாளாக இன்றும் விஜயபாஸ்கரிடம் லஞ்சஒழிப்புத்துறை உயரதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை இன்று 3 மணி நேரம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படும் தொகைக்கு முறையான கணக்கு இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார்.

காவல்துறையினர் விசாரணையின்போது எந்த நெருக்கடியும் எனக்குக் கொடுக்கவில்லை எனவும் மேலும் இந்த வழக்குத் தொடர்பாக சம்மன் அனுப்பினால் மீண்டும் ஆஜராவேன் எனவும் தன்னிடம் கணக்கில் வராத பணம் என்று எதுவும் இல்லை என்றும் எல்லாவற்றிற்கும் தன்னிடம் கணக்கு உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: