தடுப்பூசி போட்டிருந்தால் போதும்!: அமெரிக்கா வந்து செல்ல வெளிநாட்டினருக்கு விதித்த கட்டுப்பாடுகளை நீக்கினார் அதிபர் ஜோ பைடன்..!!

வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் வெளிநாட்டினருக்கு போடப்பட்ட பயண கட்டுப்பாடுகளை நீக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றை காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு விதித்திருந்தது. முழுமையாக தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று அமெரிக்கா கூறியிருந்தது.

இதன்படி தடுப்பூசி சார்ந்து பாதுகாப்பான முறையில் வெளிநாட்டினர் அமெரிக்கா வந்து செல்லும் வகையில் புதிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ளார். அதன்படி 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் சில மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெறுபவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள் தடுப்பூசி போட்டிருப்பதற்கான அதிகாரபூர்வ சான்றை காட்ட வேண்டும். சர்வதேச பயணிகள் கிளம்புவதற்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றை பெற வேண்டும் என்றும் இந்த புதிய நடைமுறைகள் வரும் நவம்பர் 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: