டெல்லி : ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி ஆஜராக முடியாது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரிய அப்போலோவின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக வாதங்களை அப்போலோ நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தார். அதாவது, “ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை ஒருதலைப்பட்சமாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் தலைவர் ஏராளமானோர் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் எங்களது மருத்துவர்களையே மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றனர்.
விசாரணை விவரங்கள் திட்டமிட்டு ஊடகங்களுக்கு கசியவிடப்படுகின்றன. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி ஊடகங்களில் தொடர்ந்து தவறான ஊகச் செய்திகள் வெளியிடப்பட்டது.ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் தரம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்த கருத்துகளே போதுமானவை. ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் அப்போலோ மருத்துவமனையின் நற்பெயர் களங்கப்படுத்தப்பட்டுள்ளது.மயக்கமடைந்து கீழே விழுந்த நிலையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போதாமை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி எப்படி விசாரிக்க முடியும் ?.ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் குழு உதவி இல்லாமல் ஆணையம் கருத்து தெரிவிக்க கூடாது. ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் மருத்துவர்கள் விசாரணைக்கு செல்ல விரும்பவில்லை.மருத்துவர்கள் குழு அடங்கிய வேறு விசாரணை ஆணையம் முன் ஆஜராக தயாராக உள்ளது, என்றார்.
மேலும், “ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு பிரைவேசி தேவைப்பட்டதாக கூறி சிசிடிவி கேமராக்கள் அகற்றபட்டன” எனவும் அப்போலோ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.