திருவட்டார் அருகே கடன் வாங்கியவர் வீட்டின் முன்பு தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா

குலசேகரம் :திருவட்டாரை அடுத்துள்ள முதலார் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். விவசாய கூலி தொழிலாளியான இவர் தன்னுடன் நட்பாக பழகிய மலவிளை பகுதியை சேர்ந்த சைலஸ் என்பவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அவரது மகளின் திருமண செலவுக்காக கடனாக ரூ.2.5 லட்சம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சைலஸ் 3 மாதங்கள் வட்டி கொடுத்துள்ளார். அதன்பின் வட்டியும் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ரமேசின் மகளுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் சைலசிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் மதியம் ரமேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சைலஸ் வீட்டிற்கு சென்று, வீட்டின் முன் கஞ்சி காய்ச்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.நேற்றும் 2வது நாளாக போராட்டம் நீடித்தது. இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.இதில் முதல் கட்டமாக ரூ 50 ஆயிரம் வழங்குவதாக ைசலஸ் ஒப்பு கொண்டார்.

Related Stories: