விராலிமலை : இலுப்பூர் அருகேயுள்ள மேலபட்டியில் மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாகவும், சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாகவும் பள்ளி மாணவர்களின் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.பஞ்சபூதா சர்வதேச தற்காப்புக் கலை சம்மேளனம் சார்பில் பஞ்சபூதா உலக சாதனை புத்தகத்தின் நிகழ்வாக நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழர்களின் பாரம்பரிய போர்கலையான சிலம்பத்தில் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியவாறு இரண்டு கிலோ மீட்டர் தூரம், ஒரு மணி நேரம் நின்ற நிலையில் இடைவிடாது சிலம்பத்தை கைகளால் சுழற்றியும் மாணவர்கள் சாதனை படைத்தனர். 638 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியை பஞ்சபூதா நிர்வாக இயக்குனரும், சிலம்பக்கலை வல்லுனருமான சதீஷ்குமார் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினார்.
சிலம்பக் கலை, மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்டிஓ தண்டாயுதபாணி, தாசில்தார் முத்துக்கருப்பன், ரவிச்சந்திரன் (தனி), மருத்துவர் புனிதாகுமார், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சத்யமூர்த்தி, ஆர்ஐ பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.