வேலூர் : வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பெட்ரோல் கேனுடன் வந்த பெண், மாமனார் குடும்பத்தினரிடம் இருந்து பிஎப் மற்றும் பென்சன் தொகை ₹23 லட்சத்தை பெற்றுத்தரவேண்டும் என மனு அளித்துள்ளார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் வேலூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் அளித்த மனுவில், ‘வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வக்கீல் ஒருவர், சத்துவாச்சாரி கோர்ட் அருகே நின்றபோது அவ்வழியாக வந்த டிராக்டர் பள்ளத்தில் சாய்ந்து வக்கீல் மீதும் சாய்ந்தது. இதில், அவர் படுகாயமடைந்தார். சிகிச்சையின்போது அவரது கால் அகற்றப்பட்டது. அவருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும்’ என தெரிவித்தனர்.
பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவர், தனது 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவர்களை போலீசார் விசாரித்து கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர். கலெக்டரிடம் ரேவதி அளித்த மனுவில் கூறியதாவது: எனது கணவர் தரணி. கடந்த 2013ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்துகொண்டோம். 2 மகள்கள் உள்ளனர். தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த எனது கணவர் கடந்தாண்டு இறந்துவிட்டார்.
தற்போது தாய் வீட்டில் தங்கியுள்ளேன். எனது கணவர் இறப்புக்கு வந்த பிஎப் மற்றும் பென்சன் தொகையை எனது மாமனார் ராஜேந்திரன், மாமியார் வனரோஜா, மூத்த மகன் பிரபாகரன், உறவினர்கள் தாட்சாயணி, சேகர், சிந்து உள்ளிட்டோர், பொய்யான சாட்சி தயாரித்து பென்சன் தொகை பெற்றுக்கொண்டனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்தேன். நான் இதயநோயாளி. தற்போது எனது உடல்நிலை சரியில்லை. இன்னும் சிறிது காலம்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு பிறகு குழந்தைகள் அனாதையாகிவிடுவார்கள். எனவே, மாமனார் குடும்பத்தினர் மோசடி செய்த ₹23 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. பெருமுகையை சேர்ந்த வனிதா(35) என்பவர் அளித்த மனுவில், ‘நான் பெருமுகை ஊராட்சி மன்றத்தில் 8வது வார்டு உறுப்பினராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கடந்த 18ம் தேதி நள்ளிரவு பெருமுகையை சேர்ந்த சுதாகர் மற்றும் ரஜினி ஆகியோர் கூட்டாளிகளுடன் வந்து எனது வீட்டின் கதவை தட்டி துணைத்தலைவர் பதவிக்கு நாங்கள் கூறும் நபர்களுக்குதான் வாக்களிக்கவேண்டும் என மிரட்டினர். பின்னர் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் யாரும் போட்டியிடாததால் சுதாகர் தரப்பினரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் அன்றிரவு பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தமிழரசி, அவரது மகன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வீட்டிற்கு வந்த என்னையும், எனது கணவரையும் ஆபாசமாக பேசி தாக்கினர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்துள்ளேன். இருப்பினும் எனக்கு அச்சமாக உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.காங்கேயநல்லூர் திருவள்ளுவர் நகர், குமரன் நகர் மக்கள் அளித்த மனுவில், ‘4 கிராமங்களுக்கு நடுவில் உள்ள இடத்தில் பாதாள சாக்கடை திட்ட பம்பிங் சிஸ்டம் அமைக்கும் பணி நடக்கும் நிலையில் ஊர் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த பள்ளம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை விபத்து ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக மூட வேண்டும்’ என தெரிவித்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் முன்னதாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல் பளு தூக்கும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 34 பேர் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.பாதுகாப்பில் காவலர்கள் கவனக்குறைவுவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனுக்ளுடன் வருகின்றனர். ஒரு சிலர் பெட்ரோல், மண்ணெண்ெணய் கேனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார், மனுக்களுடன் வருபவர்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். ஆனால் நுழைவு வாயிலில் இருக்கும் போலீசார் பெயரளவில் மட்டுமே சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை செய்யாமல், பணியில் இருக்கும் போலீசார் கதைகளை பேசிக்கொண்டு, கவன குறைவாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.மனு அளிக்க தூக்குகயிறுடன் வந்த வாலிபர்சிவசக்திசேனா இந்து மக்கள் இயக்க நிறுவனர் ராஜகோபால் என்பவர் தூக்கு கயிறுடன் வந்து அளித்த மனுவில், ‘நான் தொரப்பாடியில் நாட்டு மருந்து கடை வைத்துள்ளேன். கடந்த வியாழக்கிழமை எனது கடைைய 3 பேர் கல்லால் அடித்து நொறுக்கினர். என்னையும் ெகாலை செய்வதாக மிரட்டினர். நான் பாகாயம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் என்னை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் மிரட்டுகின்றனர். எனக்கு நீதி கிடைக்கவேண்டும். பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என கூறியிருந்தார்.