ஐடி நிறுவனத்தில் ரூ.25 லட்சம் திருட முயன்ற மேலாளர் கைது: கூட்டாளிகளும் சிக்கினர்

சென்னை: வேப்பேரி ரித்தர்டன் சாலையில் குளோபல் டெக் என்ற பெயரில் ஐ.டி நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 7ம் தேதி இங்கிருந்த வெள்ளி விநாயகர் சிலை திருடு போனது. விசாரணையில் அந்த நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் பணியாற்றி வந்த ஜாகீர் அலி என்பவர், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் ஜாகீர் அலியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஜாகீர் அலிக்கு வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தில் இருந்து செல்லும் போது பெரிய அளவிலான பணத்தை கொள்ளையடித்து செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதற்காக கோவையில் உள்ள தனது நண்பர்களான விஜயகுமார் (28), விஷ்ணு (27) ஆகியோரை சென்னைக்கு வரவழைத்துள்ளார். அவர்களின் புகைப்படங்களை வைத்து, குளோபல் டெக் நிறுவனத்தின் ஊழியர்கள் போல் 2 போலியான அடையாள அட்டைகளை தயாரித்து கொடுத்துள்ளார். கடந்த 7ம் தேதி மாலை ஊழியர்கள் அனைவரும் பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது, போலி அடையாள அட்டை வைத்திருந்த விஜயகுமார் மற்றும் விஷ்ணு ஆகியோரை நிறுவனத்திற்கு வரவழைத்து, மேலாளர் அறையில் உள்ள லாக்கரை திறந்து பணத்தை பார்த்துள்ளனர்.  

ஆனால் லாக்கரில் பணம் இல்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த 3 பேரும், வந்த வரைக்கு லாபம் என்று லாக்கரில் வைத்திருந்த வெள்ளி விநாயகர் சிலையை மட்டும் திருடிக்கொண்டு சென்றுவிட்டனர். பிறகு ஜாகீர் அலி வழக்கம் போல் கடந்த 8ம் தேதி பணிக்கு வந்து, தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு மற்றொரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து ஜாகீர் அலியை போலீசார் கைது செய்தனர். கோவையில் தலைமறைவாக இருந்த விஜயகுமார் மற்றம் விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: