பணமதிப்பிழப்பு காலத்தில் ரூ.1600 கோடிக்கு சசிகலா சொத்து வாங்கிய விவகாரம் பினாமி சட்டத்தில் பதிவான வழக்கை எதிர்த்த 14 பேரின் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வி.கே.சசிகலா வீட்டில் 2017ம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, வி.எஸ்.ஜே.தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் 1,600 கோடி ருபாய் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம் பல்வேறு சொத்துகளை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளதாக கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, பழைய மாமல்லபுரம் சாலையில் மார்க் ஸ்கொயர் ஐ.டி.பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.

 இதை எதிர்த்து தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதார்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாதுஎன்று வாதிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை தரப்பு வக்கீல் வாதிடும்போது, கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகினர். இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறையில் வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரிதான் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: