தொழிலதிபரை கடத்தி பெங்களூரு ஓட்டலில் அடைத்து வைத்து ரூ.10 கோடி கேட்டு சித்ரவதை செய்த 5 பேர் கைது

சென்னை: ஆந்திர தொழிலதிபர் துளசிவம் கிருஷ்ணா(35). இவருக்கு ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில் பல கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் சதுரடி நிலம் உள்ளது. இதை  விற்க முயற்சி செய்து வந்தார். பாலாஜி என்பவர்அதை வாங்க முன்வந்தார். அதன்படி துளசிவம் கிருஷ்ணாவை புரோக்கர்கள் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களுடன் பாலாஜியும் இருந்துள்ளார். இந்நிலையில், சென்னை வந்த துளசிவத்தை, பாலாஜி, நில புரோக்கர்கள் நிலத்தை தங்களது பெயருக்கு பவர் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று எழுதி வாங்கியுள்ளனர்.

ஆனால், அதை பதிவு செய்யாததால், அது காலாவதியாகிவிட்டது. இதனால், ஆத்திரமடைந்த பாலாஜி தனக்கு வேண்டிய நில புரோக்கர்களுடன் சேர்ந்து, கடந்த மாதம் 18ம் தேதி சென்னை வந்த தொழிலதிபர் துளசிவம் கிருஷ்ணாவை மீண்டும் கடத்தினார். பிறகு துளசிவத்தின் தாய் ரூபாவுக்கு போன் செய்து, எங்களுக்கு சென்னையில் உள்ள நிலத்தை எழுதி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ரூ.10 கோடி பணம் கொடுத்தால் உங்கள் மகனை விட்டுவிடுகிறோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரூபா சம்பவம் குறித்து இணை கமிஷனர் நரேந்திரன் நாயரிடம் புகார் அளித்தார். அதன்படி குற்றவாளிகளை பிடிக்க விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. செல்போன் சிக்னல் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பெங்களூரில் தொழிலதிபர் துளசிவம் கிருஷ்ணாவை கடத்தி சித்ரவதை செய்த சாலிகிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(எ)பாலாஜி, நில புரோக்கர்களான ஆழ்வார்திருநகரை சேர்ந்த சுரேஷ், பள்ளிக்கரணையை சேர்ந்த ரவுடி செல்வநேசன்(எ)ஸ்பீடு செல்வா, கோடம்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன், மதுரையை சேர்ந்த திருமுருகன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தொழிலதிபரை பத்திரமாக மீட்டனர்.

Related Stories: