அனைத்து கோயில் சிலைகளையும் பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்பட்டுள்ளதா? அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோயில்களை பாதுகாக்க வேண்டும். கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும். கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து இந்த சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும்.

ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட  வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோயிலுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும். அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும்.

கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும். கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்பட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள உத்தரவுகள் குறித்து விளக்கம் கோரி மனுதாக்கல் செய்ய உள்ளோம். உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதேபோல தொல்லியல் துறை சார்பிலும் அறிக்கை அளிக்க அவகாசம் கோரப்பட்டது.

அப்போது, நீதிமன்றத்துக்கு உதவியாக ஆஜரான ரங்கராஜன் நரசிம்மன் உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்காமல் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்படவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: