ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாத உற்சவங்கள் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் நடைபெறும் உற்சவங்கள் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் பல உற்சவங்கள் நடைபெறுகிறது. அதில், 1ம் தேதி மாதாந்திர ஏகாதசியும், 4ம் தேதி தீபாவளி ஆஸ்தானமும், 6ம் தேதி திருமலை நம்பி சாத்துமுறையும், 8ம் தேதி நாக சதுர்த்தியையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி 4 மாட வீதிகளில் வீதியுலா, மணவாள மகாமுனி சாத்து முறை நடைபெறுகிறது.

ேமலும், 10ம் தேதி புஷ்ப யாகத்தையொட்டி அங்குரார்ப்பணம், 11ம் தேதி  புஷ்ப யாகம், வேதாந்த தேசிகர் சாத்துமுறை,  16ம் தேதி கைசிக துவாதசி ஆஸ்தானம், சதுர்மாத  விரதம் நிறைவு, 18ம் தேதி கார்த்திகை  தீப உற்சவம், 19ம் தேதி  திருமங்கையாழ்வார் சாத்துமுறை நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: