ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரையில் முதுகலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, குழு அமைத்து முடிவெடுக்க, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, தி.மு.க தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ‘மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்க கூடியது. அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்பது, மொத்த இடஒதுக்கீட்டு அளவான 50 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. அதனால் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அந்த இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தனர்.

உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு 10  சதவீதம் கூடுதல் இடஒதுக்கீடு எப்படி செய்யப்பட்டது. அதற்கான வருமான அளவுகோல் எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வியழுப்பியதோடு, அதுகுறித்து பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எந்த குந்தகமும் ஏற்பட கூடாது. இதில் பின் தங்கிய வகுப்பினருக்கு வழங்கப்படும் 10 சதவீதம் இடஒதுக்கீடும், ஓபிசிக்கு வழங்கும் 27 சதவீத இடஒதுக்கீடும் வெவ்வேறு ஆகும் என திமுக தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில், உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் நேற்று ஒரு கோரிக்கை சமர்ப்பித்தார். அதில், ‘முதுகலை மருத்துவ படிப்பின் கலந்தாய்வு தொடங்க உள்ளதால் ஓபிசி இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு நடப்பாண்டில் கூடுதலாக 10 சதவீதம் வழங்கப்படுமா’ என்பது குறித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி சந்திரசூட், ‘ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நடந்து வரும்் ் முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது’ என தெரிவித்தார்.

Related Stories: