முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கடந்த ஜூலை 22ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு அவரிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களையும் 25 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணத்தினையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முதல்முறை சம்மன் அனுப்பப்பட்ட போது உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி கால அவகாசம் பெற்றிருந்தார். அந்த அடிப்படையில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு இன்று ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் 5 மணி நேரமாக விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக இவர் 2016ல் இருந்து 2021 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கானது பதியப்பட்டுள்ளது. 2016க்கு முன்பாக அவர் வைத்திருக்கும் சொத்து பட்டியல் விவரங்கள் மற்றும் 2021ஆம் ஆண்டு அவர் வேட்புமனு தாக்கலின் போது கொடுக்கப்பட்ட சொத்துவிவரங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது கணக்கில் வராமல் 55% அதிகமாக அவர் சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை அவர்கள் கோரியிருந்தனர். முதற்கட்டமாக இவர் தொடர்பான 26 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து நூற்றுக்கணக்கான கேள்விகள் அவரிடம் கேட்பட்டு வருகின்றன.

வருமானத்திற்கு அதிகமாக எவ்வாறு இந்த சொத்துக்கள் வந்தது. இதற்கான மூலதனங்கள் எங்கே? உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட்டு வாக்குமூலமாக பதிவு செய்து வருகின்றனர். முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டுமல்லாது அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் மீதும் இந்த சொத்துகுவிப்பு வழக்கானது போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு அடுத்த கட்டமாக அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி மீண்டும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: