தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது... 5 நாட்களுக்கு கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை : வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக இன்று திருநெல்வேலி ,தூத்துக்குடி ,ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை திருநெல்வேலி ,தூத்துக்குடி ,தென்காசி ,கன்னியாகுமரி, நாமக்கல், கரூர் ,சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தெற்கு  வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 26-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.  இது மேற்கு நோக்கி நகர்ந்து அதனை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும். வருகின்ற 27ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி ,ராமநாதபுரம் ,விருதுநகர், மதுரை ,தென்காசி ,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், 28 மற்றும் 29ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28ம் தேதிகளில் மேற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: