என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி, தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை : ரஜினி உருக்கம்!!

டெல்லி : டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விழாவில், இந்திய திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, இந்த விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. தாதா சாகேப் பால்கே விருது பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். என்னை உருவாக்கிய பாலச்சந்தருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.

என்னுடன் பணிபுரிந்த ஓட்டுநர் ராஜ்பகதூர், அவர்தான் எனது நடிப்புத் திறனை கண்டறிந்து ஊக்குவித்தார். என்னை இந்த துறைக்கு கொண்டு வந்த என் நண்பன் ராஜ் பகதூருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.  அவர்தான் என்னை ஊக்குவித்தார். அனைத்தையும் தாண்டி என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று தெரிவித்தார்.தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,இந்திய திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடிய பொன் நாளாகும் இந்நாள்.ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன், என்றார்.

Related Stories: