பெல் அடிச்சா தண்ணிய குடிக்கணும்!

நன்றி குங்குமம் தோழி

பெல் ரிங் ஃபார் வாட்டர் என்ற ஹேஸ்டேக் சமீபத்தில் கேரளாவில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பள்ளி மாணவர்கள் படிப்பு ஆர்வத்திலோ மிஸ் திட்டுவார்கள் என்ற பயத்திலோ தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்துவதில்லை. 4 வயது முதல் 8 வயது வரையிலான மாணவ, மாணவிகள் தினமும் 1.4 லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். அதேபோல் 9 முதல் 13 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள் தினமும் 1.9 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறது மருத்துவ அறிக்கை ஒன்று.

ஆனால் பல குழந்தைகள் பள்ளி நேரத்தில் தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்காததால் செரிமான கோளாறு போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தான் சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடம் பிரேக் விட வேண்டும் என்று  உத்தரவிட்டார். வைரலான கேரள வீடியோவை பின்பற்றி மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சில

பள்ளிகளில்  தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தில் தனது நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

அதாவது பள்ளிகளில் ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் மணி ஒலிக்கும். அப்போது மாணவர்கள் கட்டாயம் தண்ணீர் அருந்தவேண்டும். இதற்காக அவர்கள் கொண்டு வரும் பாட்டிலில் தண்ணீர் குறைந்துள்ளதா என்பதையும் உறுதி செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சில ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை பெல் அடிக்கும்போது மாணவர்கள் தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்யவேண்டும்.

மாணவர்கள்  கொண்டு வரும் நீர் காலியாகி விட்டால்பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள கேன்களில் இருந்து தண்ணீரை பிடித்து அருந்த அறிவுறுத்த வேண்டும். சில பள்ளிகளில் டம்ளர்களில் ஆர்வலர்கள் ஊற்றி வைத்திருக்கும் தண்ணீர் மாணவர்களின் தாகத்தை தீர்க்கிறது. தொடக்கப்பள்ளி  வரையிலான சிறுவர்களுக்கு பள்ளி நேரத்தில் 4 முறையும், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரைமணிக்கு ஒருமுறையும் இந்த பெல் அடிக்கப்படும்.

இதன் மூலம் தண்ணீரை குடிக்க வேண்டும் என்ற ஆர்வம் தற்போது மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளதாக புனே பகுதியை சேர்ந்த அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கோத்தாரி, டிரினிட்டி போன்ற சர்வதேச பள்ளிகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் பள்ளிகளில் இந்த முறை ஏற்கனவே பின்பற்றப்படுகிறது. இங்கு 3 முறை தண்ணீர் குடிக்க பெல் ஒலிக்கிறது.

தொகுப்பு: பா.கோமதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: