பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் காவல் நிலையம் செல்லக்கூடாது :பாஜக தேசிய துணை தலைவர் சர்ச்சை பேச்சு!!

லக்னோ : பெண்கள் மாலை 5 மணிக்கு மேல் காவல் நிலையம் செல்லக்கூடாது என்று பாஜக தேசிய துணை தலைவரும் முன்னாள் உத்தராகண்ட் மாநில ஆளுநருமான பேபி ராணி மவுரியா பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த பாஜக கூட்டத்தில் உத்தராகண்ட் முன்னாள் ஆளுநரும் பாஜகவின் தேசிய துணை தலைவர் பேபி ராணி மௌரியா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,  காவல் நிலையத்தில் ஒரு பெண் அதிகாரி இருந்தாலும் கூட,மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் தனியாக காவல் நிலையம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்துகிறேன். இருட்டின பிறகு பெண்கள் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குடும்பத்தில் உள்ள தந்தை, கணவன் அல்லது சகோதரனையோ உடன் அழைத்து செல்லுங்கள், என கூறினார்.

பேபி ராணி மௌரியாவின் இந்த பேச்சு உபியின் பாஜக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.இந்நிலையில், பேபி ராணியின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ஷப்பீர் அப்பாஸ், பேபி ராணி உண்மையைப் பேசியுள்ளார் என்று விமர்சித்தார். இதற்கிடையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள பேபி ராணி, யோகி அரசும், பிரதமர் மோடி தலைமையிலான அரசும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கைக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், எனது பேச்சை திரித்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன என்று அவர் கூறினார்.

Related Stories: