சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜர்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். ஜூலை 22ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. சோதனையின் போது ரூ.25 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்காக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி தான் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு இன்று ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் தான் தற்போது தலைமை அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு தேவையான பல முக்கிய ஆவணங்களை சோதனையின் போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இன்று விஜயபாஸ்கரிடம் அடுத்தடுத்த கேள்விகள் தயாரிக்கப்பட்டு விசாரணை நடத்தை இருப்பதாக தெரிகிறது. இன்று மாலை வரை இந்த விசாரணையானது நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Related Stories: