சென்னை : இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி இந்தி என்று அதன் தலைவர் அறிவித்ததற்கு திமுக எம்.பி வில்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பல தரப்பட்ட மொழிகள் கொண்ட மக்கள் வாழும் நம்தேசத்தில், இந்தி மொழியை திணிப்பதற்கான முயற்சிகள் காலங்காலமாக அரங்கேற்றப்பட்டு வரும் அவல நிலை நிலவுகிறது. அதன் நீட்சியாக தற்போது, 2021 அக்டோபர் மாத பட்டயக் கணக்காளர் இதழில் (Chartered Accountant Journal ),இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI ) தலைவர் திரு. சி.ஏ. நிஹார், இந்தி மொழியை பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவித்துள்ளதோடு, பட்டயக் கணக்காளர்கள் ( Charted Accountants ) தங்களின் அன்றாட வேலைகளிலும்,நிறுவனத்தின் அலுவல்களிலும், மாணவர்களுடனும்,அரசுடனும், ஒழுங்குமுறையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடும்போதும் இந்தி மொழியை மட்டுமே பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.