போபால்: மத்தியப்பிரதேசம் ஆஷ்ரம் - 3 வெப்தொடரின் படப்பிடிப்பில் புகுந்து அதன் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பஜ்ரங் தளம் தொண்டர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்தியப்பிரதேசம் தலைநகர் போபாலில் பழைய சிறைச்சாலை பகுதியில் ஆஷ்ரம் - 3 வெப்தொடர் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் போது பஜ்ரங் தளம் தொண்டர்கள் அத்துமீறி உள்ளே புகுந்தனர். ஆஷ்ரம் - 3 வெப்தொடர் இந்து மதத்தை அவமதிப்பதாக குற்றம்சாட்டிய அவர்கள், இயக்குநர் பிரகாஷ் ஜா முகத்தில் மை பூசி அவமானப்படுத்தினர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை ஓட ஓட விரட்டி இரும்பு தடிகள் மூலம் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். வாகனங்கள், கேமரா உள்பட படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைத்தையுமே பஜ்ரங் தளம் தொண்டர்கள் சூறையாடினார்கள்.