தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததில் மகிழ்ச்சி: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: ஒன்றிய அரசு சார்பில், 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க, நேற்று காலை 10.50 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக போயஸ் கார்டனில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘எனக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த நேரத்தில் என்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் கே.பாலசந்தர் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. விருது வாங்கியவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த விருது கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்று சொன்னார். இதுதொடர்பாக நேற்று ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவில், ‘மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது’என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: