டீசல் விலை உயர்வுதான் மோடி அரசின் சாதனை: திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு

அவனியாபுரம்: டீசல், பெட்ரோல் விலை உயர்வுதான் மோடி அரசின் சாதனை என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை செல்வதற்காக, நேற்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது: ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டுமென தமிழினம் போராடிக்கொண்டிருக்கிறது. உலகம் தழுவிய அளவில், மனித உரிமை ஆர்வலர்களும், தேசிய இன விடுதலைப்போராட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், ராஜபக்சேவை உரிய முறையில் விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒன்றிய அரசு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் விமான நிலையத்தை திறக்க வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. உத்தரபிரதேச மாநில அரசையும், ஒன்றிய அரசின் இத்தகைய செயலையும் கண்டிக்கிறோம்.

 டீசல், பெட்ரோல் விலை உயர்வுதான் மோடி அரசின் சாதனை. விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களின் முழு கட்டுப்பாட்டில் ஒப்படைத்து இருப்பதால் தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு முனைப்பும் ஒன்றிய அரசு காட்டவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காத நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு முழுமையாக மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: