கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் காருக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தாசில்தாரின் கார் உள்ளே நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தாசில்தார் கார் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து கண்டாச்சிபுரம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் கார் உள்புறம் எரிந்து சாம்பலானது. இதையடுத்து போலீசார் தாலுகா அலுவலகத்தின் பின்பக்கம் சென்று பார்த்தபோது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.