மாமியாருடன் கள்ளத்தொடர்பால் ஆத்திரம்: கார் விற்பனையாளர் அடித்து கொலை: மருமகன் கைது

அம்பத்தூர்: மாமியாருடன் இருந்த கள்ளத்தொடர்பை துண்டிக்காததால், கார் விற்பனையாளரை அடித்து கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த பாடி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). கார், ஆட்டோ வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்கிடையில், கோபிக்கும் கொரட்டூர் காமராஜர் நகர் 9வது தெருவில் வசிக்கும் ராணி(40) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராணியின் கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். மேலும், கோபியுடன் ராணிக்கு இருந்த கள்ளத்தொடர்பு அவரது மருமகனும், ஆவின் பால் பண்ணையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியருமான கொரட்டூர் சாவடி தெருவில் வசிக்கும் நந்தகுமார் (22) என்பவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, நந்தகுமார் பலமுறை கோபியை கண்டித்து வந்து உள்ளார். இருந்த போதிலும், ராணியுடன் இருந்த கள்ளதொடர்பை கோபி துண்டிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு ராணி வீட்டிற்கு கோபி வந்துள்ளார். இதனை தெரிந்து, அங்கு நந்தகுமார் வந்துள்ளார். பின்னர்,  கோபிக்கும் நந்தகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த நந்தகுமார், கோபியை சரமாரியாக முகத்தில் குத்தி உள்ளார். அவருக்கு மூக்கு, வாய் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு கோபிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனிடையே, கோபியின் தாயார் சூர்யா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக   நந்தகுமாரை நேற்று முன்தினம் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து, போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர். மாமியாருடன் இருந்த கள்ளத்தொடர்பை துண்டிக்காததால், கார் விற்பனையாளரை மருமகன் அடித்து கொலை செய்த சம்பவம் கொரட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: