கள்ளக்காதல் பிரச்சனை பயங்கரம்; கார் விற்பனையாளர் அடித்துக்கொலை

ஆவடி: பாடியில் கள்ளக்காதல் பிரச்னையில் கார் விற்பனையாளரை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அருகே பாடி கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). இவர் கார் மற்றும் ஆட்டோக்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவந்தார். கோபிக்கும் கொரட்டூர் காமராஜர் நகரை சேர்ந்த ராணி (40) என்பவருக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி ராணி வீட்டுக்கு கோபி சென்றுவந்துள்ளார். நேற்றுமுன்தினம் ராணி வீட்டில் கோபி இருந்தபோது ராணியின் மருமகன் கொரட்டூர் சாவடி தெருவில் வசித்துவரும் நந்தகுமார் (22) பார்த்துவிட்டார்.  அவர் சென்று தட்டிக்கேட்டபோது கோபிக்கும் நந்தகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த நந்தகுமார் சரமாரி தாக்கியதில் கோபியின் மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்தார்.

இதையடுத்து நந்தகுமார் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில், கோபியை அப்பகுதியினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுசம்பந்தமாக கோபியின் தாய் சூரியா கொடுத்த புகாரின்படி, கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நந்தகுமாரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதனிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவந்த கோபி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கமாக மாற்றி நந்தகுமாரை மீண்டும் கைது செய்தனர். கள்ளக்காதல் பிரச்னையில் கார் விற்பனையாளரை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: