நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்றவர் கைது

நத்தம்: நத்தம் அருகே நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்றவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் கள்ள நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்வதுடன், அதன் பயன்பாடும் இருந்து வருவதாக எஸ்பி சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் நத்தம் எஸ்ஐ சேகர் தலைமையில் ஆண்டிச்சாமி, பாக்கியராஜ் உள்ளிட்ட ேபாலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று செந்துறை அருகே களத்துப்பட்டியில் ஆண்டிச்சாமி (51) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டில் தயார் நிலையில் ஒரு நாட்டு துப்பாக்கி, துப்பாக்கிகள் தயாரிப்பிற்கு தேவையான கட்டை, லீவர், இரும்பு குழாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் கருமருந்து பொடிகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, ஆண்டிச்சாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்தது குறித்தும், அவரிடமிருந்து வாங்கியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: