போதையில் போலீஸ் வாகனத்தை ஓட்டி விபத்து ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

அண்ணாநகர்: அரும்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு நோக்கி, நேற்று முன்தினம் இரவு சைரன் ஒலித்தபடி, விஐபி பாதுகாப்பு  வாகனம் ஒன்று, போக்குவரத்துக்கு இடையூறாக, மற்ற வாகனங்களை உரசியபடி தாறுமாறாக சென்றது. இதை பார்த்த வாகன ஓட்டிகள், அந்த வாகனத்தை விரட்டி சென்று, மடக்கி பிடித்தனர். அப்போது, வாகனத்தில் இருந்த 3 பேர் தப்பி ஓடினர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் புதுப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணன் (28) என்பதும், விஐபி பாதுகாப்பு போலீஸ் வாகனத்தை மது போதையில் தாறுமாறாக ஓட்டி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து, ஆயுதப்படை போலீஸ் துணை ஆணையர் கோபாலன், காவலர் சரவணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். விஐபி  பாதுகாப்பு  வாகனத்தை அவர்  எங்கிருந்து ஒட்டி வந்தார், அதிலிருந்து தப்பியோடிய 3 பேர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: