ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜ் மர்மச்சாவு குறித்து ஆத்தூரில் தனிப்படை முகாமிட்டு விசாரணை: அதிமுக பிரமுகர்கள் கண்காணிப்பு

ஆத்தூர்:  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் ஜெயலலிதாவின் தேயிலை எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புள்ள அவரது கார் டிரைவரான சேலத்தை சேர்ந்த கனகராஜ் மர்மமான முறையில் கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் திட்டமிட்டு கார் ஏற்றி கொலை  செய்யப்பட்டதாக அண்ணன் தனபால், மனைவி கலைவாணி ஆகியோர் குற்றம் சாட்டினர். இதையடுத்து கனகராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க சேலம்  எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

அதன்படி விசாரணை நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. 20க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் ஆத்தூருக்கு சென்றனர். அங்கு  சக்தி நகரில் வசிக்கும் கனகராஜ் உறவினர் ரமேஷ் அவரது மனைவி, அண்ணன் மற்றும் உறவினர்களிடம் கனகராஜ் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கனகராஜ் உயிரிழக்கும் முன்பு அவரது நண்பரின் டூ வீலரை பயன்படுத்தியுள்ளார்.  அந்த டூ வீலரின் உரிமையாளரான பார்த்திபன் என்பவரை அழைத்து வந்து தனி இடத்தில் விசாரணை நடத்தினர்.  இந்த வாகனம் அடகு வைக்கப்பட்ட வாகனம் என்பது தெரிந்தது. பார்த்திபன் தனது டூவீலரை விஜய் என்பவரிடம் அடகு வைத்துள்ளார். அந்த வாகனத்தை கனகராஜின் உறவினர் ரமேஷ் மறு அடகுக்கு வாங்கியது தெரிந்தது. பார்த்திபன், விஜய்யிடம் விசாரணையை முடித்து நேற்று அதிகாலை அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ஆத்தூரில் அதிமுக பிரமுகர்களை  தனிப்படையினர் கண்காணித்து வருகின்றனர். சந்தேகப்படும் அதிமுக பிரமுகர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இதற்காக தனிப்படையினர் ஆத்தூரில் முகாமிட்டுள்ளனர்.

Related Stories: