சிறார்களின் வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்யக்கூடாது: போக்சோ வழக்கில் போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனுப்பிய சுற்றறிக்கை: சென்னை, உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெற்ற போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பாக நடைபெற்ற  கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, சில அறிவுரைகள்  வழங்கப்படுகிறது. போக்சோ சட்ட வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் முதல் தகவல்  அறிக்கை நகலை, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு,  அது மரணமாக இருந்தாலும் அல்லது பிற குற்றங்களாக இருந்தாலும் உரிய  நீதிமன்றத்துக்கு முதல் தகவல் அறிக்கை சென்றடைந்தவுடன் உடனடியாக வழங்க  வேண்டும். அனைத்து விசாரணை அதிகாரிகளும் பிரிவு 164 சிஆர்பிசி  மற்றும் இந்திய தண்டனை சட்டம் அல்லது போக்சோ பிரிவுகளில் பாதிக்கப்பட்ட  சிறார்களின் வாக்கு மூலங்களை பெறும்போது வழக்கமான முறையில் செய்வது போல்  காணொளி (வீடியோ) பதிவு செய்யக் கூடாது. ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்து முடிவு செய்ய  வேண்டும்.

முக்கியமான வழக்குகளில் நீதிமன்றத்தில் இருந்து  காணொளி பதிவு எடுப்பது தொடர்பான ஆணை பெறப்பட்டாலோ அல்லது விசாரணை அதிகாரி  தேவை எனக் கருதினாலோ மட்டுமே காணொளி பதிவு செய்யப்படும்போது  சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறையை சார்ந்த புகைப்பட  கலைஞர்களை கொண்டே காணொளி பதிவு செய்திடல் வேண்டும். போக்சோ  வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் இடைக்கால நிவாரணம் பெறுவதற்கான உரிமை  குறித்து திக்கப்பட்டவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ  சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என்ற  விவரத்தை தெரிவிக்க வேண்டும். போக்சோ  சட்ட வழக்குகளின் அனைத்து விசாரணை அதிகாரிகளாலும் கண்டிப்பாக பின்பற்ற  வேண்டும். தவறும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக  அனைத்து நகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  தங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து புலனாய்வு அதிகாரிகளுக்கும் மேற்கூறிய  அறிவுரைகளை தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: