சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி சசிகலா தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தன்னை பொதுச்செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஓபிஎஸ், எடப்பாடி உள்ளிட்டோரை கட்டுப்படுத்தும் என்று அறிவிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.