சென்னை: கடந்த 2012ல் கொண்டு வரப்பட்ட நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை சீரமைக்க உயர்மட்டக்குழு விரைவில் அமைக்கப்பட இருப்பதாக பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு ₹8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டுவதற்கே பதிவுத்துறை பெரும் சிரமத்தை சந்தித்தது. கடந்த 2017ல் வழிகாட்டி மதிப்பில் 33 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டன. அதன்பிறகு அதிகளவில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டாலும் ₹11 ஆயிரம் கோடி தான் வருவாய் எட்டுகிறது. இந்நிலையில் வழிகாட்டி மதிப்பில் குளறுபடிகளை சரி செய்தால் மட்டுமே கூடுதல் வருவாயை எட்ட முடியும். எனவே, இதுதொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பேரில் பெருமளவு உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பை சீரமைக்கும் வகையிலும், குளறுபடிகளை சரி செய்யும் வகையிலும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் சிறப்பு உயர்மட்டக்குழு அமைக்க முடிவு செய்யப்படுகிறது.