வெளியூர் போறீங்களா, அச்சம் வேண்டாம்; பூட்டிய வீட்டை கண்காணிக்க ‘சகோ’ செயலி அறிமுகம்: பதிவு செய்தால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் பறக்கும்

கோவை: வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக காவல்துறை சார்பில் ‘சகோ’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்தால், போலீஸ் நிலையத்திற்கு தகவல் சென்றுவிடும். போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். கோவை மாவட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பொதுவாக வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போதோ அல்லது வேலைக்கு செல்லும்போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது இல்லை.

மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுத்துவரும் போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்ததற்காக அதன் உரிமையாளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்பே அறிவித்து இருந்தனர். ஆனால் இதனை யாரும் கடை பிடிக்காததால் தொடர்ந்து கோவை மாவட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தது. கடந்த 3 வருடங்களில் கோவை மாவட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 346 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

தற்போது போலீசார் ரோந்து செல்லும்போது பூட்டியிருக்கும் வீடுகளை அடையாளம் காண்கிறார்கள். அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். பூட்டிய வீடுகள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மாவட்ட போலீஸ் சார்பில் பிரத்யேகமாக ‘சகோ’ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் இந்த செயலியை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்கள் தங்களது செல்போன் மூலமாக என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பான கோவை என்பதன் சுருக்கமே சகோ. இந்த செயலியில் வீட்டை பூட்டிவிட்டு செல்லும் பொதுமக்கள் முதலில் தங்களுடைய செல்போன் எண்ணை பதிவிட வேண்டும். அதற்கு ஓடிபி அதனைப்பதிவு செய்து உள்ளே நுழையலாம்.தங்களது வீட்டின் முகவரி எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை வீடு பூட்டப்பட்டிருக்கும்?, எந்த ஊருக்கு செல்கிறீர்கள்? என்பது போன்ற விவரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும். அதை தொடர்ந்து தானாகவே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் சென்றுவிடும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட போலீசார் அந்த முகவரிக்கு நேரடியாக சென்று கொள்ளை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு பணியை மேற்கொள்வர்.

மேலும் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று வீட்டின் முகப்பு பகுதியை புகைப்படம் எடுத்து பதிவு செய்வார்கள். எந்த போலீசார் அங்கு சென்று ரோந்து பணியை மேற்கொண்டார்கள் என்பது குறித்த விவரங்கள் செயலி மூலமாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். செல்போன் பயன்படுத்தாத பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தங்களின் வீடு பூட்டப்பட்டிருக்கும் குறித்த தகவலை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: