18 டன் கான்கிரீட் கலவையுடன் டிவைடரில் மோதி கவிழ்ந்த லாரி: பல்லடம் அருகே பரபரப்பு

பொங்கலூர்: பல்லடம் அருகே 18 டன் கான்கிரீட் கலவையுடன் லாரி, டிவைடரில் மோதி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து ஜல்லிபட்டிக்கு தனியார் நிறுவன லாரியில் 18 டன் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவையுடன் லாரி புறப்பட்டது. லாரியை டிரைவர் ரகுபதி ஓட்டினார். பல்லடம் அடுத்த உடுமலை சாலை மந்திரிபாளையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அங்கு காமநாயக்கன் பாளையம் காவல் துறையினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி சாலையோரம் நின்றிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 18 டன் கலவையுடன் லாரி சாலையில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சாலையின் நடுவில் வைக்கப்பட்ட டிவைடர் அகலம் குறைவாக வைத்ததால் லாரி அதனை கடக்க முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. டிவைடர் மிக குறுகியதாக உள்ளதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இங்கு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் உள்ளதால் டிவைடரை அகற்றி அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18 டன் கலவையுடன் லாரி கவிந்து கிடைப்பதால் ஜேசிபி மற்றும் கிரேன் உதவியுடன் லாரியை அகற்றும் பணிகள் நடைபெற்றது. எடை அதிக அளவு இருந்ததால் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்றது. இந்த விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: