மெகா தடுப்பூசி முகாம்: மாலை 6.30 மணி நிலவரப்படி 21.11 லட்சம் பேருக்கு தடுப்பூசி..! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மெகா தடுப்பூசி முகாமில் மாலை 6.30 மணி நிலவரப்படி 21.11 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது.

அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேரும், 3-வது முகாமில் 24 லட்சத்து 85 ஆயிரம் பேரும், 4-வது முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரம் பேரும், 5-வது முகாமில் 22 லட்சத்து 85 ஆயிரம் பேரும் என மொத்தம் 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் பயன்பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெகா தடுப்பூசி முகாமில் மாலை 6.30 மணி நிலவரப்படி 21.11 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 8.32 லட்சம் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 1.07 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12.78 லட்சம் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: