சேதமடைந்த சாலையை தனது சொந்த செலவில் சீரமைக்கும் திமுக எம்எல்ஏ சம்பத்; தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் திமுக எம்எல்ஏ சம்பத் தம்முடைய சொந்த செலவில் சாலையை சீரமைத்து வருகிறார். புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ சம்பத் தம்முடைய தொகுதியிலுள்ள கடலூர் சாலை மிகவும் சேதமடைந்திருப்பதாக அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்துள்ளார்.

அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்காததால் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தன்னுடைய சொந்த செலவிலேயே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் அரசு செய்ய வேண்டிய வேலைகளை தாங்களே பிச்சை எடுத்தாவது செய்வோம் என்றும் எம்எல்ஏ சம்பத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ தனது சொந்த செலவில் சாலை அமைத்த செயல் முதலியார்பேட்டை தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சட்ட மன்ற உறுப்பினரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் பொதுமக்கள் புதுச்சேரி அரசு மக்கள் நல திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: