அரசு கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகும் நெல்: கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே, அரசு கொள்முதல் நிலையத்தில், மழையில் நனைந்து நெல் வீணாவதால், உடனடியாக கொள்முதல் செய்ய, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம் ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகளின் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் அதிகாரிகள் கொள்முதல் செய்யாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைகின்றன. மேற்பகுதியில் தார்ப்பாய் போட்டு மூடினாலும், தரையில் செல்லும் நீரால் அடிப்பகுதி ஈரமாகிறது.

இங்கிருந்து கொள்முதல் செய்த, நெல் மூட்டைகளை ஈரப்பதத்தால் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. இதனால், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருப்பட்டியில் நேற்று மறியல் செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவபாலன், எஸ்.ஐ ராஜேந்திரன் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கொள்முதல் செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுக்கு வீணான அவப்பெயர் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Related Stories: