கொல்கத்தா : நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த கூழாங்கல் திரைப்படம், ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சினிமாத்துறையினருக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 94-வது ஆஸ்கார் விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆஸ்கர் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 15 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன.