கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தின் வழியே ஆந்திராவின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சார ரயில் சென்று வருகிறது. இவ்வழியே சென்னை - சூளூர்பேட்டை, நெல்லூர் செல்லும் மின்சார ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் கனகவல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலறிந்த வட்ட வழங்கல் அலுவலர் கனகவள்ளி தலைமையில் அதிகாரிகள் குழு கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, எளாவூர், ஆரம்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயிலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சென்னை - சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரயிலில் 1.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அவற்றை பறிமுதல் செய்து தச்சூர் கூட்டு சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.