செயற்கை மூட்டு பிட்டிங்கில் வெடிகுண்டு இருக்குமா?..விமான நிலைய போலீஸ் மீது நடிகை சுதா சந்திரன் புகார்

மும்பை: செயற்கை மூட்டு பிட்டிங்கை விமான நிலைய போலீசார் கழற்றச் சொல்வதால், விமான நிலையத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக நடிகை சுதா சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள பிரபல நடிகையும், நாட்டியக் கலைஞருமான சுதா சந்திரன், பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் தன் காலை இழந்தார். இதையடுத்து செயற்கை மூட்டு மற்றும் கால் பொருத்திக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, சினிமா மற்றும் டி.வி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலம் பிரதமர் மோடிக்கு உருக்கமான கோரிக்கையை முன்வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: பிரதமர் மோடிக்கு வணக்கம். எனக்கு செயற்கை மூட்டு பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை மூட்டோடு நடனமாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளேன். எனது பணி நிமித்தமாக வெளியூர் செல்லும்போது, விமான நிலையத்தில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறேன். பாதுகாப்பு பணியில் இருக்கும் சிஐஎஸ்எப் ேபாலீசார், ஒவ்வொரு முறையும் என்னை சோதனைக்கு உட்படுத்துகின்றனர். நான் பொருத்தியுள்ள செயற்கை மூட்டு பிட்டிங்கை ‘டிடெக்டர்’ (வெடிகுண்டு உள்ளதா என்பதை அறிய) மூலம் சோதனை செய்ய சொல்வேன்.

ஆனால், அவர்கள் என்னை நம்பமாட்டார்கள். எனது செயற்கை மூட்டு பொருத்தப்பட்ட பகுதியை வெளியே எடுத்துக்காட்ட சொல்வார்கள். அதை எப்படி வெளியே எடுத்துக்காட்ட முடியும். இது எப்படி சாத்தியமாகும்? விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சோதனைகளின் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறேன். இதுதான் நம் நாடா, இதுதான் நாட்டிலுள்ள பெண்களுக்கு தரப்படும் மதிப்பா, மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வயதை அறிவிக்கும் வகையில், ‘சீனியர் சிட்டிசன்’ என்ற சிறப்பு அடையாள அட்டையை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நான் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எனக்கு அதிக வருத்தத்தை கொடுக்கிறது, வேதனையை அளிக்கிறது. எனது கோரிக்கை பிரதமருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சென்றடையும் என்று நம்புகிறேன். இவ்வாறு சுதா சந்திரன் உருக்கமாகப் பேசியுள்ளார். அவரது கோரிக்கையை அறிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், இந்த செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

Related Stories: