கோவையில் பயங்கரம் 3 மாத பேரனை அடித்து கொன்ற பாட்டி

கோவை: கோவையில் 3 மாத ஆண் குழந்தையை பாட்டி அடித்துக்கொலை செய்தார். கோவை கவுண்டம்பாளையம் நாகப்பா காலனி 3வது வீதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (31). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (24). இந்த தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை ஆண். மற்றொரு குழந்தை பெண். ஆண் குழந்தைக்கு ஆரியன் என்ற பெயரும், பெண் குழந்தைக்கு ஆரிஹா ஸ்ரீ என்ற பெயரும் சூட்டினர். இரட்டை குழந்தைகளை ஐஸ்வர்யா கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து மதுரை மாவட்டம் மத்திசியத்தில் வசிக்கும் ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி (45) பேரக் குழந்தைகளை கவனிப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். ஐஸ்வர்யாவின் தந்தை ஷேக்ஸ்பியர் மதுரையில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக சாந்தி  உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.  நேற்று முன்தினம் பாஸ்கரன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் குழந்தைகளும், ஐஸ்வர்யா, சாந்தி ஆகியோரும் இருந்தனர். ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காக மருந்து கடைக்கு சென்று விட்டார். குழந்தைகளை அவரது சாந்தி பார்த்து வந்தார்.

திடீரென ஆவேசமடைந்த சாந்தி தனது பேரக்குழந்தைகளை சரமாரியாக தாக்கியுள்ளார். முகத்தில் கைகளால் குத்தியுள்ளார். இதில் 2 குழந்தைகளும் அழுது அலறி துடித்தன. சுய நினைவிழந்து மயங்கின. வெளியே சென்றிருந்த ஐஸ்வர்யா வீட்டிற்குத் திரும்பியதும் 2 குழந்தைகளும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தைகளை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் 3 மாத ஆண் குழந்தை ஆர்யன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பெண் குழந்தை ஆரிஹாஸ்ரீ கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்தி தலைமறைவாகி விட்டார். பேரனை பாட்டி அடித்து கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: