ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மச்சாவு குறித்து மறுவிசாரணை தொடங்கியதுவிபத்து நடந்த இடத்திலும் ஆய்வு

ஆத்தூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மச்சாவு குறித்த விசாரணை நேற்று மீண்டும் தொடங்கியது. இதையடுத்து ஆத்தூரில் உள்ள கனகராஜ் உறவினரை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு நுழைந்த கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை கொலை செய்து, அறைகளில் இருந்த பல்வேறு சொத்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்தச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இச்சம்பவம் நடந்த 4 நாள் கழித்து, ஏப்ரல் மாதம் 27ம் தேதி இரவு, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் கார் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். தொடர்ந்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், தனது தம்பியை திட்டமிட்டு கொலை ெசய்துள்ளனர் என்று விசாரணை அதிகாரியிடம் தெரிவித்தார். கனகராஜின் மனைவி கலைவாணியும் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து கனராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கனகராஜ் மர்மச்சாவு வழக்கை முதலில் இருந்து, மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, கனகராஜ் உயிரிழந்தது தொடர்பான விசாரணை நேற்று (22ம் தேதி) மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 20க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் 5 வாகனத்தில் காலை 6.45 மணிக்கு ஆத்தூருக்கு வந்தனர். பின்னர், ஆத்தூர் அடுத்த சக்தி நகரில் வசிக்கும் கனகராஜ் உறவினர் ரமேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு ரமேஷ் மற்றும் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் கனகராஜ் குறித்தும், அவரது உயிரிழப்பு குறித்தும் விசாரணை நடத்தினர். இதேபோல் விபத்து நடந்த இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கனராஜ் உயிரிழக்கும் முன்பு அவரது நண்பரின் டூ வீலரை பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து, அந்த டூ வீலரின் உரிமையாளரான பார்த்திபன் என்பவரை அழைத்து வந்து தனி இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கனகராஜ் கார் மோதி உயிரிழந்ததுள்ளார். இதனால் அந்த காரை ஓட்டி வந்தவரை விசாரிக்க தனிப்படை திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணைக்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி மகேஸ்வரி, ஊட்டி எஸ்பி ஆசிஷ் ரவாத் உள்பட தனிப்படை போலீசார் ஆத்தூரில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இறந்து போன கனகராஜின் அண்ணன் தனபாலை அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை தொடங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: