மாணவிகளுக்கு பாலியல் தொல்லை 2 ஆசிரியர்களுக்கு சிறை: சிவகங்கை போக்சோ கோர்ட் உத்தரவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த 11.8.2015ல் இப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ரெங்கராஜ் (36), 2ம் வகுப்பில் படித்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் ரெங்கராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ரெங்கராஜுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தவர் சரவணன் (48). இவர் கடந்த 14.12.2017ல் ஏழாம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பள்ளி தலைமையாசிரியர் கொடுத்த புகாரின்பேரில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணன் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சரவணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: