மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ: தப்பிக்க குதித்த காவலர் பரிதாப பலி

மும்பை: மத்திய மும்பையின் கர்ரி ரோடு பகுதியில் 61 மாடிகளை கொண்ட அவிக்னா பார்க் என்ற குடியிருப்பு உள்ளது. நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்த கட்டிடத்தின் 19வது மாடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமள என அந்த மாடியில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் பரவியது. தீப்பற்றியதை அறிந்த செக்யூரிட்டி அருண் திவாரி (30) என்பவர் மாடியில் இருந்து கீழே செல்ல முடியாமல் தவித்தார். இதனால், பால்கனி வழியாக குதித்து தப்புவதற்காக அங்கு தொங்கியபடி இருந்தார். அப்போது புகை மண்டலமாக இருந்ததால், பால்கனியில் இருந்து தொங்கிய அவர் குதித்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, மருத்துவமனையில் பொதுமக்கள் அனுமதித்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீ விபத்து பற்றி அறிந்து அங்கு சென்ற மேயர் கிஷோரி பட்னேகர்,`தீ விபத்து நடந்த மாடியில் இருவர் சிக்கியிருப்பதாகவும் 26 பேர் மீட்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், பல மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: