ஜெயலலிதா சிலை பராமரிப்பு விவகாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஜெயலலிதா உருவ சிலைக்கு தினமும் மாலை அணிவிப்பதற்கும், சிலை மற்றும் சிலை அமையப் பெற்ற இடத்தை பராமரித்து பாதுகாப்பதற்கும் அனுமதி வழங்கிடுமாறு கடந்த 16ம் தேதி கடிதம் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

எனது கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், இதில் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் வழங்கிடும் நடைமுறை இல்லாத நிலையில் ஜெயலலிதா உருவ சிலை அரசின் சார்பில் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்று உயர் கல்வி துறை அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். என்னுடைய கோரிக்கையை ஏற்று, சென்னை காமராஜர் சாலை மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா முழு உருவ சிலை நல்ல முறையில் பராமரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை உயர் கல்வி துறை அமைச்சர் மூலம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: